செவ்வாய், 27 அக்டோபர், 2009

மர்மக்காய்ச்சல்களில் மர்மம் உள்ளதா?

டாக்டர் ச. அன்பழகன்
இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக அன்றாடம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய காய்ச்சல்கள் சிக்குன்குனியாவை ஒத்திருப்பதாக மக்களில் சிலரும் சிக்குன்குனியாவே திரும்பவும் வந்துவிட்டதாக வேறு சிலரும் கருதுகின்றனர். தமிழக அரசோ சில இடங்களில் சிக்குன்குனியா உள்ளதாக ஒப்புக்கொண்டும் பல இடங்களில் இது சிக்குன்குனியா இல்லை வேறு வகையான வைரஸ் காய்ச்சல் என்றும் கூறிவருகின்றது. வைரஸ் காய்ச்சல் சுகாதார சீர்கேட்டினாலும் அதன் மூலம் உருவாகும் கொசுக்களினாலும் பரவுவவதாக அமைச்சரும் அதிகாரிகளும் கூறிவருகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தில் ஆயிரக்கணக்கானவர்களை வைரஸ் காய்ச்சல் பாதித்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அரசு வைரஸ் காய்ச்சலுக்கான ஒரே தீர்வாக ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பி செயல்படுகிறது. ஆங்கில மருத்துவமோ வைரஸ்களை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்கிறது. காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ் கண்டுபிடிக்கப்படாதவரை இந்தக் காய்ச்சலுக்கு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுவதில்லை. வைரஸ் கண்டுபிடிக்கப்படாதவரை மர்மக்காய்சசலாகவே அது நீடிக்கிறது. வைரஸை கண்டுபிடித்து, காய்ச்சலுக்கு சிக்குன்குனியா, டெங்கு என பெயர் சூட்டுவிழா நடத்தி அதற்கான மருந்துகளையும் கண்டுபிடித்து அதனை நோயாளிகளுக்குக் கொடுத்தாலும் நோய் என்னவோ நிரந்தரமாக குணமாவதில்லை. காய்ச்சலுக்கான மருத்துவம் என்பது ஆங்கில மருத்துவத்தைப் பொருத்தமட்டில் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான முயற்சியாகவும் வலிக்கொல்லிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகவுமே உள்ளது. கடந்த பருவகாலத்தில் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆங்கில மருத்துவத்தில் சிசிச்சை பெற்றவர்கள் பலர் இந்த பருவகாலம் வரை கை, கால் மூட்டுகளில் வலியுடன் அவதிப்பட்டுவருகின்றனர்.
நோய் கண்டறிவதில் ஆங்கில மருத்துவத்துக்கும் மாற்று மருத்துவங்களுக்கும் வேறுபாடு உள்ளது. ஆங்கில மருத்துவம் ஆய்வக சோதனைகளையும் வைரஸ்களையும் அடிப்படையாகக் கொண்டு நோயைக் கண்டறிகிறது. சித்தா, ஆயர்வேதம், யுனானி போன்ற மருத்துவங்கள் நாடிப்பரிசோதனையைக்கொண்டு நோயைக் கண்டறிகின்றன. ஹோமியோபதியிலோ காய்ச்சலுக்கான பெயர் அவசியமில்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல், மனக்குறிகளைக் கொண்டும் தனித்துவக்கோட்பாட்டின் அடிப்படையிலும் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன. ஹோமியோபதியின் பார்வையில் இன்று பரவலாக காணப்படும் மர்மக்காய்ச்சகளில் எந்த மர்மமும் இருப்பதாக தெரியவில்லை. ஹோமியோ மருத்துவம் செய்வதற்குத் தெவையான குறி, குணங்களை தௌளத்தெளிவாக வெளிப்படுத்துவதாகவே இந்த மர்ம(?)க்காய்ச்சல்கள் உள்ளன. உதாரணமாக தலைவலி, குமட்டல், வாந்தி இவைகளின் தன்மைகளைக்கொண்டும், வலியானது சிறிய மூட்டுகளில் உள்ளனவா, பெரிய மூட்டுகளில் உள்ளனவா, நீண்ட எலும்புகளில் உள்ளனவா, தசைகளில் வலி உள்ளனவா எந்த நிலைகளில் வலிகள் கூடுகின்றன அல்லது குறைகின்றன, பசி செரிமானம், தாகம் ஆகியவை எவ்வாறு உள்ளன என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு அதற்கான சரியான மருந்தினைத் தேர்ந்தெடுத்து கொடுப்பதன் மூலம் காய்ச்சலையும் பிற துன்பங்களையும் விரைவாகவும் மென்மையாகவும் நிரந்தரமாகவும் ஹோமியோபதி மருத்துவத்தினால் நலமாக்கமுடியும். ஆகவே மாற்று மருத்துவங்களைக் கொண்டு - குறிப்பாக - உயரிய ஹோமியோபதி மருத்துவத்தைக் கொண்டு வைரஸ் காய்ச்சல்களை வெல்வதற்கு அரசும், பொதுமக்களும் முன்வரவேண்டும்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

மக்கள் நல்வாழ்வு - பொறுப்பை தட்டிக்கழிக்கும் தமிழக அரசு

எஸ். விஜயன்

கடந்த ஜூலை மாதம் படாடோபமாக நடைபெற்ற ஒரு அரசு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ‘‘உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத்திட்டம்”. இத்திட்டப்படி ஆண்டு வருமானம் 72000க்கு கீழ் இருக்கும் மக்கள், சில உயிர் காக்கும் சிகிச்சைகளை செய்து கொள்ள முடியும். இத்திட்டத் தின் கீழ் வருபவர்கள் சுமார் 75 லட்சம் குடும்பங்கள் அடங்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. இதில் அரசின் 12 நலவாரியங் களில் பதிவு செய்யப்பட்ட 35 லட்சம் உறுப்பினர் களும் ஆண்டு வருமானம் 72000க்கு கீழ் உள்ள குடும்பங்களும் அடங்கும். இதற்கான செலவு ஆண்டுக்கு 517.307 கோடி ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு இத்தொகை ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும். இந்நிறுவனம், இதன் பயனாளிகளுக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்கும். இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்கான கட்டணத்தை ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் திரும்பக் கொடுக்கும். இத்திட்டப்படி 4 வருடங்களில் குடும்பம் ஒன்று ரூ1 லட்சம் வரை சிகிச்சை பெற அனுமதிக்கப்படும். குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ 466 வீதம் 4 வருடங்களுக்கு 75 லட்சம் குடும்பங்களுக்கான பிரிமியத்தை அரசு செலுத்தும். குடும்பத் திற்கு 5 பேர் என்று கணக்கிட்டால் கூட இது தமிழகத்தின் சரிபாதி பேர் இத்திட்டத்தின் கீழ்வருவார்கள்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் - ஒரு கண்துடைப்பு

இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில் (அரசாணை எண் 49) தமிழக அரசானது, மக்கள் நல்வாழ்விற்காக ஆண்டுதோறும் 2800 கோடி ரூபாய் செலவிடுவதாகவும் ஆனால் சில உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு நிதியுதவி செய்யுமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் ஆகியோருக்கு மனுக்கள் வந்த வண்ணம் உள்ளதால், அரசே நிதியளிக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. Òபுதிய காப்பீட்டுத் திட்டத் திற்கு கலைஞர் பெயர் சூட்டுவதற்கு ஒரு அரசாணையும் (அரசாணை எண் 72) காப்பீட்டுத்திட்டம் அமலுக்கு வந்ததற்கு ஒரு அரசாணையும் (அரசாணை எண் 200) வெளியிடப் பட்டுள்ளது.

நமது நாட்டில் செயல்படும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அரசிடமிருந்து பலகோடி ரூபாய்களுக்கு வரிச் சலுகைககள் பெற்றுவருகின்றன. உதாரணத்திற்கு, இம் மருத்துவமனைகள் இறக்குமதி செய்யும் கருவிகளுக்கு இறக்குமதி வரி செலுத்தத் தேவையில்லை. இம்மருத்துவமனைகளுக்கு அரசே இலவசமாக இடம் வழங்கியுள்ளது. மின்கட்டணம் வியாபார நிறுவன கட்டணம் கிடையாது. தண்ணீருக்கு அதிக வரி செலுத்த வேண்டியதில்லை. இவைகளின் கட்டுமானத் திற்காக வாங்கிய பொருட்களுக்கு வரிச்சலுகை உண்டு போன்றவைகள் அடங்கும். இதற்கு மாறாக இவைகளில் சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகளில் முப்பது சதவீதமான வர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அரசிற்கு கொடுத் துள்ளன. எனினும் இந்த உத்தரவாதம் நடைமுறைப்படுத்த வில்லை. நடைமுறை படுத்தப்படுகிறதா என்பதை கண் காணிக்கும் அமைப்பும் அரசிடம் இல்லை. உதாரணத்திற்கு சென்னை அப்பொல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகளில் உண்மை யாகவே முப்பது சதவீதம் பேர் ஏழைகளாகவும் இலவசமாகவும் சிகிச்சை பெறுகின்றனர் என்றால், அரசிற்கு எவ்வளவு பிரிமியம் தொகை மிஞ்சும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்தப் பட்டால், அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மருத்துவ உதவி வேண்டும் என்ற மனுக்கள் ஏன் குவிய வேண்டும்? கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் அமைப்பை ஏன் அரசு இதுவரை ஏற்படுத்தவில்லை? இதைச் செய்திருந்தால் இத்தகைய காப்பீட்டுத் திட்டம் தேவையே இல்லையே! எனினும் இந்த காப்பீட்டுத் திட்டத்தை ஐந்து முக்கியமான அம்சங்களில் நாம் அலச வேண்டியதுள்ளது.

கடமையிலிருந்து வழுவிச் செல்லும் அரசு

முதலாவது அம்சம், மக்கள் நல்வாழ்வை பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்ற கருத்தில் ஏற்பட்ட மாற்றம். இந்த கடமையை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இயங்கும் ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் ‘அவுட்சோர்°’ செய்வது என்பதை ஏற்க முடியாது. தன்னிடம் உள்ள கட்டமைப்பை பயன்படுத்தி நல்வாழ்வு சேவைகளை இலவசமாக வழங்கும் வாய்ப்பு அரசிற்கு அதிகமாக இருக்கும் போது காப்பீட்டுப் பாதையை அரசு ஏன் தேர்ந்தெடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது. மக்கள் அனைவ ருக்கும் இலவசமான எளிதில் கிடைக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு திட்டங்களை சரிவர நிறைவேற்றாமல், பொதுத்துறை மருத்துவ சேவைகளை குறை கூறுவதன் மூலம், தனியார் துறையை வளர்க்கவும் - கொஞ்சம் கொஞ்சமாக பொதுத்துறையை நாசப்படுத்தும் வேலையைச் செய்யவும், அரசுக்கு இது போன்ற காப்பீட்டுத் திட்டங்கள் உதவும். உலகமயமாக்கல் கொள்கைகளின் அடிப்படைக் கூறுகளான, அரசு, பொருளாதாரத்திலிருந்து விலகியிருத்தல், சேமநல நடவடிக்கைகளை அரசு கைவிடல், தனியார்மயமாக்கல் ஆகியவற்றிலிருந்து மக்கள் நல்வாழ்வு மட்டும் விலக்களிக்கப் பட்டிருப்பதாக உலக வங்கி போன்ற நிறுவனங்களே கூறியுள்ளன. கனடா, ஃபிரான்° போன்ற முதலாளித்துவ நாடு களில் கூட அனைத்து மக்கள் நல்வாழ்வுச் செலவுகளும் அரசே செய்கின்றது. கியூபா போன்ற சோசலிச நாடுகளில் சோசலிச குடியரசு அமைக்கப் பட்ட தினத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுச் செலவை முழுமையாக அரசு ஏற்றுக் கொண்டு ள்ளது. ஆனால் சோசலிசக் குடியரசு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியாவில் நல்வாழ்வுச் செலவில் 80 சதவீதத்தை மக்கள் தங்கள் கைப்பணத்திலிருந்து செலவிடும் அவல நிலைதான் உள்ளது. இதனால், உலகிலேயே மிக அதிகமாக தனியார்மயப் படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுச் சேவைகளை கொண்ட நாடு இந்தியா என்ற மோசமான அந்த°தைப் பெற்று விட்டது. இது சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படை கோஷங்களில் ஒன்றான “எல்லோருக்கும் நல்வாழ்வு” என்பதிலிருந்து விலகிச் செல்வ தாகும். 1948இல் ஏற்கப்பட்ட போரே கமிட்டி பரிந்துரையின் அடிப்படை அம்சமான “காசு இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் மருத்துவம் மறுக்கப்படக் கூடாது” என்பதையும் நோய் சிகிச்சையை விட, நோய் தடுப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையும் மறுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. முதலில் காப்பீட்டுத் திட்டம் மூலம் அரசே காசு கொடுப்ப தாகவும், பிறகு காசு கொடுப்பதையும் பற்றாகுறை யாக்கி (தற்போதும் அதுதான் நிலைமை) இறுதியில் காசு கொடுப்பதை அறவே நிறுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் படிப்படியாக செல்லும் போக்கே காப்பீட்டுத் திட்டப் பாதை. அரசிற்கும் மக்கள் நல்வாழ்விற்கும் சம்பந்தமில்லை, அவரவர்கள் மருத்துவச் செலவை அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனோநிலையை பண்பாட்டு ரீதியாக உருவாக்கும் நோக்கம் கொண்டதே காப்பீட்டுப் பாதை மூலமாக நல்வாழ்விற்காக திட்டமிடுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காப்பீடு என்றொரு தொழில்

இரண்டாவது அம்சம், காப்பீட்டுத் திட்டம் செயல்படும் முறை பற்றியது. முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் யாதெனில் காப்பீட்டு உறுதி கொடுக்கும் நிறுவனம் பொதுத் துறையில் உள்ளதா தனியார் துறையில் உள்ளதா என்பது தான். மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் நம்நாட்டில் உண்டு. காப்பீட்டு வணிகத்தில் பொதுத்துறை ஈட்டும் லாபம் (உபரி என்று குறிப்பிடப்படுகிறது) அரசு கெள்கைகளின் அடிப்படையில் சமூகத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். தனியார்துறை ஈட்டும் லாபம் தனியாரின் சொத்துக் குவியலாக மாறும். இது இந்த துறை செயல்படுவதில் உள்ள ஒரு பொதுவான அம்சம்.

தமிழகத்தில் அரசின் உயிர்காக்கும் திட்டம் துபாயினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் °டார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வுக்காக தான் ஆற்ற வேண்டிய சமூகக் கடமையினை நிறைவேற்ற ஒரு காப்பீட்டு நிறுவனம் அரசுக்கு தேவைப்படுமேயானால், தனியார் லாப நோக்கம் ஏதுமற்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தான் மக்கள் நலம் பேணும் அரசு தேர்வு செய்திருக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை? குறைந்த விலைப்புள்ளி என்ற கருத்து இங்கே ஒரு தனியார் நிறுவனம் அரசு (மக்கள்) பணத்தில் லாபம் ஈட்டுவதை நியாயப்படுத்த கூறப்படும் ஒன்றாகத்தான் உள்ளது. மேலும் அரசு செலுத்தும் பிரிமியத் தொகை ரூ. 517.307 கோடி. (4 ஆண்டுகால ஒப்பந்தமாக இருந்தாலும் கூட) உயர்த்தப்படு வதற்கான சாத்தியக் கூறும் உண்டு. பொதுவாக இம்மாதிரியான திட்டங்களில் உரிமை கோரும் விண்ணப்பங்கள் ஒரு ஆண்டில் மிகவும் அதிகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தென்றால் அடுத்த ஆண்டு பிரிமியத் தொகை பரிசீலிக்கப்பட்டு உயர்த்தப் படும். இத்திட்டத்தின்படி °டார் காப்பீட்டு நிறுவன மானது 35 சதவீதத்தை லாபமாகவும் இயங்கு செலவாகவும் தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள 65 சதவீதத்தையே மக்களுக்கு வழங்குகிறது. இந்த 65 சதவீதத் தொகையானது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அவர்களின் லாபம், விளம்பரச் செலவு, ஆடம்பரங்கள், வல்லுனர்களுக்கு கொடுக்கும் அதீதமான ஆலோசனைத் தொகை போக மக்க ளுக்கு உண்மையாக போய்ச் சேர வேண்டிய தொகை எவ்வளவு என்று நம்மால் ஊகிக்க முடியும். அரசு செலவிடும் 517.307 கோடியில், நான்கு ஆண்டுகள் ஒப்பந்தப்படி 2069.204 கோடியில் பத்து சதவீதம் மக்களுக்கு பயனுள்ளதாக மாறினாலேயே ஆச்சரியம்தான். மீதமுள்ள 1800 கோடி தனியாருக்கு கைமாறுவது தவிர்க்க முடியாதது.

காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளின் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மட்டுமே பயனாளிகள் சிகிச்சை பெறமுடியும். அரசு மருத்துவ மனைகளில் உள்ள கட்டண வார்டுகளை இதில் சேர்ப்பதற்கு அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இதில் பெருந்தொகை தனியார் நிறுவனங்களுக்கே செல்லும்.

இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பொதுத்துறை அரசு மருத்துவ மனைகளைச் சேர்த்தாலும், எல்லாத் துறைகளும் இதில் பங்குபெற வாப்பில்லை. ஏற்கனவே அறிவித்த 51 வகை நோய்க ளுக்கும், அது சார்ந்த துறைகளுக்கு மட்டுமே, காப்பீட்டுத் திட்டம் அமலாகும். அதிலும் பொருளாதாரத்தின் அடித் தட்டில் உள்ள ஏழை எளியவர்களில் காப்பீட்டுத்திட்டத்தில் பயனடைபவர்கள்/ பயன் பெறாதவர்கள் அல்லது பயன்பெற தகுதியற்றவர்கள் என்ற இருவேறு நிலையில் சிகிச்சை அளிப் பதற்கான ஒரு மோசமான நிலைமை அரசு மருத்துவமனைகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் நிதியைக் கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளை மேலும் விரிவுபடுத்தலாம் என்ற வாதமும் அரசு பிரிமியத்தொகையின் ஒரு பகுதியை அரசு மருத்துவமனைகள் மூலமாக திரும்பப் பெறும் என்ற நிலைபாடும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நேரடியாக செலவு செய்வதை விடுத்து தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம், தன்னுடைய நிதியை தாரைவார்த்துவிட்டு மீண்டும் ஒரு பகுதியை (?) திரும்ப பெறுவதற்கு முயற்சி செய்வதாக கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

இதே தொகையை அரசு தன்னுடைய பொதுத்துறை நல்வாழ்வு கட்டமைப்பின் மூலம் நேரடியாக செலவழித்தால் பலன் பன்மடங்கு இருக்கும் என்பது கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத உயர்நிலைப் பள்ளி மாணவன் கூட கூறமுடியும். இன்னொரு முக்கியமான அம்சம், காப்பீட்டுத் தொழிலின் அடிப்படை விதிமுறை அனுமதிக்கும் ‘திட்டத்திலிருந்து விலகும் உரிமை’ கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்டி ருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 466 பிரிமியத்தை அரசு செலுத்துகிறது. அக்குடும்பமானது முதல் வருடத்திலேயே 1 லட்ச ரூபாய்க்கு சிகிச்சை செய்து கொண்டால் அடுத்த மூன்று வருடத்திலும் எதுவும் கிடைக்காது என்ற நிலையில் ஏன் பிரிமியம் செலுத்த வேண்டும்? அப்படிப்பட்டவர்கள் திட்டத் திலிருந்து விலகினால் ஏராளமான பிரிமியத்தொகை அரசுக்கு மிஞ்சுமே?

ஒரு குடும்பத்திற்கு 4 வருடத்திற்கு உயர்சிகிச்சைக்கு ஒரு லட்சம் போதுமா?
மூன்றாவதாக, 1 லட்சம் காப்பீட்டுத் தொகை நோயாளிகளுக்கு உரிய பலனளிக்குமா என்பது. உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு 4 வருடத்திற்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான செலவில் ஒரு லட்சம் மட்டும் °டார் காப்பீட்டு நிறுவனம் வழங்கும். இத்திட்டத்தின் கீழ் 51 நோய்களை உள்ளடக்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு கிடையாது. இருதய சிசிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை உள்ளிட்ட நோய்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் பட்டியலில் விடுபட்ட நோய்கள் ஏராளம்.
பட்டியலில் உள்ள நோய்களுக்கான சிசிச்சையளிப்பதற்கே, வேறு சில ஆய்வு சிகிச்சைகள் தேவைப்படுகிறது. இதற்கும் இத்திட்டத்தில் இடம் இல்லை. உதாரணத்திற்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு இத்திட்டம் உதவாது. இருதய அறுவை சிகிச்சைக்கு மட்டுமே இது உதவிடும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் ஆஞ்சியோ ஆய்வை, இத்திட்டத்தின்படி செய்து கொள்ள முடியாது. ஆஞ்சியோகிராம் சோதனைக்குப்பின் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே, ஆஞ்சியோகிராம் சோதனைக்குரிய தொகையை இலவசமாக காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறமுடியும். ஆஞ்சியோகிராம் சோதனை, அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற முடிவை கொடுத்தால், இந்த சோதனைக்கான கட்டணத்தை காப்பீட்டுத்திட்டம் வழங்காது. இதேபோல, புற்றுநோய்க்கட்டி என்ற சந்தேகத்தின் பேரில் அதை உறுதி செய்ய தேவைப்படும பரிசோதனை களுக்கும் புற்றுநோய் என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, காப்பீட்டுத் திட்டத்தில் பணம் கிடைக்கும் (அதற்கும் உச்சவரம்பு உண்டு!) புற்றுநோய் அல்லாத பிற கட்டிகள்/நோய்கள் என்று தெரியவந்தால் அதற்கான செலவீனங்களை காப்பீட்டுத் திட்டத்தை நம்பி ஏமாறும் ஏழைக்குடும்பம், தன் வருமானத்திலிருந்தோ, கடன் வாங்கியோ செலவு செய்ய வேண்டும்.
இந்த 51 நோய்களிலும் சிகிச்சைக்குப்பின் செய்ய வேண்டிய சிகிச்சைக்கான செலவீனங்களும் இதில் அடங்காது. உதாரணத் திற்கு, ஒருநபர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்
னுயைடலளளை முறையினால் (தனியார் மற்றும் அரசு மருத்துவ மனையில்) சிகிச்சை பெற்று வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். (மாதச் செலவு சுமார் ரூ 2000) அந்த நபர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து கொண்டாலும் அதற்குப்பின் குறைந்தபட்ம் 3 முதல் 5 வருடங்களுக்கு மாதத்திற்கு ரூ 3000 - 5000 செலவு செய்து தொடர் சிகிச்சையை பெற வேண்டியதிருக்கும்.

குறிப்பிட்ட 51 வகை நோய்களும், மருத்துவ நோய்கள் பெருமளவிற்கு விடுபட்டுள்ளன. சாதாரண வைர° நோய்களுக்கு (டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை) மலேரியா, எலிஜுரம் போன்ற எந்த தொற்று நோயும் (சமீபத்திய பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட) இதில் சேர்க்கப்படவில்லை. இதுபோன்ற நோய்களால் இறப்பவர் எண்ணிக்கை, பட்டியலிடப்பட்டுள்ள எல்லா அறுவை சிகிச்சை நோய்களால் இறப்பவர் களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். இதைத்தவிர தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நோய்களான சக்கரை வியாதி, இரத்த அழுத்த நோய் ஆகியவற்றிற்கான சிகிச்சையை இத்திட்டத்தின் மூலம் பெற முடியாது.
இந்த 51 நோய்களுக்கும் சிகிச்சைக்கான செலவு ஒரு லட்சத்திற்குள் முடிந்துவிடும் என்ற உத்தரவாதமும் கிடையாது. ஒரு லட்சத்திற்கு மேல் ஆகும் கூடுதல் தொகையை நோயாளி தனது சொந்த பணத்திலிருந்துதான் செலவு செய்ய வேண்டும். அதற்கான வசதி ஆண்டுக்கு 72000 ரூபாய் வருமானம் ஈட்டும் குடும்பத்தில் எப்படி இருக்க முடியும்? சிகிச்சை பெறும் ஒரு சிலர் அரசை வாழ்த்துவதை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப் படுத்திக் கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கைகள் இத்திட்ட த்தின் வெற்றி என்ற தோற்றத்தை உருவாக்க உதவுமே தவிர உண்மையான வெற்றியை இது பிரதிபலிக்காது. சிகிச்சையையும் துவக்கி நடுவிலும் கைவிட முடியாமல் கடனாளியாகும் நிலைக்கே இவர்கள் தள்ளப்படுவார்கள். ஒரு குடும்பத்தில் சராசரியாக 5 பேர் என்று கணக்கிட்டால் (கணவன்-மனைவி, பெற்றோர் மற்றும் ஒரு குழந்தை) கூட உயிர்காக்கும் உயர் சிகிச்சை தேவைப்படுவர் நான்கு ஆண்டுகளில் ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக இத்திட்டத்தின் கீழ் பலனடைய முடியாது. இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலமைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் ஒருலட்சத்திற்குள் செய்துவிட முடியும் என்பது சற்று கடினமான விஷயம்தான். இத்திட்டம் ஜூலை 2009இல் அமலுக்கு வந்தது 2012ஆம் ஆண்டு சிகிச்சை பெறுபவர் அன்றுள்ள விலைவாசி நிலைமையில், இத்திட்டம் யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற நிலையை அடைந்துவிடும்.

இதைவிட முக்கியமானது, போரே கமிட்டியின் பரிந்து ரையின் முக்கிய அம்சமான நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது கைவிடப்பட்டு நோய்வந்த பின்பு செலவீனங்கள் அதிகமாகக்கூடிய அறுவைசிகிச்சை களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் தவறான அரசின் சுகாதார அணுகுமுறை இதிலும் தொடர்கிறது. உதாரணமாக சுத்தமான குடிநீரும், கொசு ஒழிப்புத் திட்டங்களும், சத்துணவு கிடைக்கப் பெறல் ஆகியவைகளால் தொற்று நோய்களை தடுக்க முடியும். இருதய நோயைத் தடுக்காமல் அதற்கான அறுவை சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டத்தை வழங்குவதை வைத்து அரசின் பொதுத்துறை சுகாதாரக் கொள்கைகளானவை, தனியார் மருத்துவ மனைகளுக்கும், மருந்து உற்பத்தியாளர்களுக்கும் சந்தை அமைத்துக் கொடுக்கும் பணியை செய்யும் நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியதிருக்கிறது.

நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியுமா?

நான்காவது, இந்த தனியார் நிறுவனங்களின் செயல்பாடு குறித்த அம்சம் இந்த நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனங்கள் பயனாளி களை எவ்வாறு ஏமாற்றி வருகிறது என்பதை மையமாக வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மைக்கேல் மூர் தயாரித்துள்ளார். 2006இல் இவர் இயக்கிய “சிக்கோ” என்ற ஆவணப்படமானது, உலகின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இந்தப்படத்தை இயக்கும் யோசனை மைக்கேல் மூரின் மூளையில் உதித்ததும், நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனங்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் விபரங்களை மின் அஞ்சல் மூலமாக தனக்கு அனுப்புமாறு ஒரு விளம்பரத்தை கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் 1100க்கும் அதிகமானோர் பதில் அனுப்பியிருந்தனர், ஒரே நாளில் 12000 பேரும் ஒருவாரத்திற்கு ஒன்றரை லட்சம் பேரும் மின் அஞ்சல் அனுப்பியிருப்பதாக மூர் கூறுகிறார். ஒவ்வொரு நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனத்திலும் சிகிச்சை பெற்றவர் அனுப்பும் விண்ணப்பத்தை நிராகரிப்பதற் கென்றே விசேஷ அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த விசேஷ அதிகாரிகளில் ஒருவர் “என்னுடைய செயல்பாடும், ஆண்டுச் சம்பள உயர்வும் நான் எவ்வளவு விண்ணப்பங்களை நிராகரித் திருக்கிறேன் என்பதிலும் எவ்வளவு தொகையை மறுத்திருக் கிறேன் என்பதைப் பொறுத்ததுதான்” என்று வெளிப்படை யாகக் கூறுகிறார்.
1960களில் அமெரிக்காவில் நடைபெற்ற முக்கியமான விவாதங்களில் ஒன்று மக்கள் நல்வாழ்வை சமூகமயமாக்குவது என்பதே! மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதை ஒரு சோசலிச கருத்தோட்டமாக பிரச்சாரம் செய்து எப்படி முறியடித்தனர் என்பதையும் இப்படம் கூறுகிறது. தற்போது அமெரிக்காவில் காப்பீட்டுத் திட்டம் இல்லாத முப்பது சதமான பேருக்கு அரசே பிரிமியம் வழங்கி காப்பீட்டுத் திட்டத்திற்குள் சேர்க்க வேண்டும் என்று ஒபாமா கூறியிருக்கும் கருத்திற்கு, வலது சாரிகள் இலவச பிரிமியம் என்ற கோட்பாட்டை எதிர்ப்பதையும், காப்பீட்டு பாதையே கூடாது, அரசே எல்லா நல்வாழ்வு சேவைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று நல்வாழ்வு ஆர்வலர்கள் கூறுவதுமான சர்ச்சை தற்போதும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய தில்லுமுல்லுகளை சுட்டிக்காட்டிய பொழுது, இத்திட்டத்தின்படி அரசு செலுத்தும் பிரிமியம் தொகையில் 65 சதவீதத்தை கண்டிப்பாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என்று அரசு தரப்பில் இருந்து பதில் வருகிறது. இவர்கள் வெளியிட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியலில் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளாகவே உள்ள நிலையில், இந்த 65 சதவீத செலவை எட்டுவதற்கு ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்காலத்தில் ஒரு பெரிய மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அரசு தரப்பிலும் இது போன்ற கேள்விகளுக்கு பதில்கள் வந்த வண்ணம் உள்ளது உதாரணத்திற்கு அரசு அலுவலர்களுக்கு இதே °டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், இதுவரை அரசு ஊழியர்கள் 154.22 கோடி ரூபாயை பெற்றிருக்கிறார்கள் என்றும் இந்நிறுவனத்திற்கு அரசு செலுத்திய பிரிமியம் வெறும் 121.7 கோடிதான் என்றும் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 கோடி (விண்ணப்பத் தொகை - பிரிமியத் தொகை + இயங்கு செலவு) நஷ்டமடைந்திருப்பதாக அரசு தரப்பு கூறுகிறது. நடைமுறையில் நஷ்டமடைவதாக கூறும் வியாபார நிறுவனங்கள் கூறும் நஷ்டம் என்பது மதிப்பீட்டு நஷ்டம். வருமானம் மற்றும் செய்யப்பட்ட உண்மைச் செலவு இதற்கு இடையில் இருக்கும் நஷ்டமே பணநஷ்டம். ஒரு இயந்திரம் வாங்கினால் 30 சதவீதத்தை தேய்மானமாக செலவில் எழுதி விட்டாலும் நடைமுறையில் 30 சதவீதம் தேய வேண்டும் என்று அவசிய மில்லை. ஆனால் பண நஷ்டத்தில் ஒரு நிறுவனம் இயங்க முடியாது. காப்பீட்டு நிறுவனம் அடைந்ததாக அரசு கூறும் நஷ்டம் என்பது பண நஷ்டமாகும். இது ஒரு வியாபாரத்தில் நடைபெறவே முடியாது. எனினும் துணிச்சலாக இத்தகைய பதில்களை அரசு கூறிவருகிறது.

அரசே ஒரு காப்பீட்டு அமைப்புதான்

ஐந்தாவது முக்கியமான அம்சம்: மக்கள் நல்வாழ்விற்கான அரசின் திட்டமிடல் பற்றிய கேள்வி. அரசு என்பது என்ன? அது மக்கள் அமைப்புதான். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லை என்றால் அதற்கான செலவில் எனக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் மனிதன் சமுதாயமாக வாழ்கிறவன். எனவேதான் மக்களின் நல்வாழ்வு செலவை மொத்தமாக மதிப்பிட்டு அதற்காக திட்டமிடும் பொறுப்பு அரசிடமே உள்ளது. இதற்காக வரிவசூலிக்க அரசுக்கு உரிமை உண்டு. வரி செலுத்துபவர்ககளில் பலர் அவர்கள் செலுத்திய வரித்தொகையளவிற்கு சிகிச்சை பெற்றிருக்க வேண்டியதில்லை. எனினும் எனக்கு நோய் வந்தால் அரசு கவனிக்கும் என்ற உத்தரவாதமே, நோய் வருவதற்கான தடுப்பு அரணாக செயல்படும். இன்றும் கூட நாம் செலுத்தும் வரிகளில், செலுத் தப்பட்டதற்கான காரணத்தை நாம் அனைவரும் அனுபவிப்பது கிடையாது. எனினும் நாம் வரி செலுத்துகிறோம். அது நமது சமுதாயக் கடமை அது நமக்கு ஒரு பாதுகாப்பை தருகிறது. இந்த வகையில் அரசே ஒரு காப்பீட்டு அமைப்புதான். எனினும் ஏற்றதாழ்வான வருவாய் ஈட்டும் மக்கள் கூட்டத்திடம் எல்லோரும் சரிசமமாக அனைத்து விஷயங்களுக்கும் வரி செலுத்துங்கள் என்று வலியுறுத்தமுடியாது. யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை அன்றைக்குள்ள சூழ்நிலையில் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் இந்த கருத்தோட்டத்தில் ஒரு தலைகீழ் மாற்றம் உலகமயமாக்கல் கட்டத்தில் ஏற்பட்டு விட்டது. “நான் ஏன் அடுத்தவனுக்காக செலவு செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தை மக்களின் ஆழ்மனதில் பதிய வைத்த பண்பாட்டு வேலையை உலகமயமாக்கல் செய்து விட்டது. ஒவ்வொருவரும் மக்கள் கூட்டத்திடமிருந்து தனி நபர்களாக்கப்பட்டுள்ளனர். கூட்டமாக பயன்படுத்தும் மேஜை தொலைபேசியிலிருந்து, ஒருவர் மட்டுமே பயன்படுத்து கைபேசி பண்பாட்டிற்கு உலகமயமாக்கல் கொண்டு வந்து விட்டது. ஆகவே பயனாளி மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து விட்டது. இந்த கோட்பாட்டை மக்கள் நல்வாழ்விற்குள் நடைமுறையில் புகுத்த முடியாது. அப்படிச் செய்தால் மனிதனின் அடிப்படை மனிதாபிமான உணர்வு கேள்விக்குள்ளாக்கப் பட்டுவிடும். அப்படியும் புகுத்தினால் மக்கள் கூட்டமே அழிய நேரிடும். இந்த முரண்பாட்டைபும் லாப நோக்கத்திற்காக பயன்படுத்தும் படைப்பாற்றல் புத்தி உலகமயமாகக்கல் கொள்கைகளுக்கு இருப்பதால்தான் நல்வாழ்வு காப்பீட்டு அமைப்புமுறை உருவாக முடிந்தது. இது மக்கள் நலனில் அரசின் கடமையை சுருக்கிவிடும் வேலையை செய்து வருவதால், அத்துணை காரணங்களுக்கும் அடித்தளமாக விளங்குவது உலகமயமாக்கலும் லாபவெறியும் என்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உடனடியாக அரசு செய்ய வேண்டியது

¨ அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டத்தை உரிய முறையில் பரிசீலனை செய்து, எல்லா உயிர்க்கொல்லி நோய்களையும் சேர்த்து அதற்கான சிகிச்சைக்கு முழுமையான மற்றும் தொடர் சிகிச்சைகளுக்கு வேண்டிய நிதியை திரட்டி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்க ளோடு தொடர்பு கொண்டு ஒரு மாற்றுத் திட்டத்தை அறிவிக்க அரசு முன்வரவேண்டும்!

¨ அரசு தன் கடமையிலிருந்து நழுவி, இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்களை நம்பியிராமல், அரசு பொதுத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்தி எல்லா சிகிச்சை களைபும் இலவசமாக எல்லாருக்கும் வழங்க வேண்டும்!

¨ இதுபோன்ற திட்டங்கள் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடிந்துவிடும்; தொடர்ச்சியான சிகிச்சைக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இது போன்ற திட்டடங்களை கைவிட வேண்டும்!

¨ உயர்சிகிச்சையை வணிகமயமாக்கிடும் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகளை உரிய முறையில் ஆய்வு செய்து அவர்கள் அரசிடம் இருந்து பெறப்பட்ட வரிச் சலுகைகளுக்கு இணையான இலவச சிகிச்சையை அரசு பரிந்துரைக்கும் ஏழைகளுக்கு அளிப்ப தற்கான ஒரு கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும்!
உடனடியாக சமூக ஆர்வலர்களும் பொறுப்புள்ள எதிர்கட்சிகளும் செய்யவேண்டியது
இத்தகைய காரணங்களினால் சமூக உணர்வு படைத்தவர்கள் தனது கடமைகளிலிருந்து நழுவிச் செல்லும் அரசை அதனுடைய பாதையில் திரும்பப் பயணிப்பதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வை காப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுப் பாதையானது அரசு தன்னுடைய கடமையிலிருந்து வழுவிச் செல்வதையே பிரதிபலிக்கிறது. காப்பீட்டுப் பாதையும் எதிர் காலத்தில் ஒரு பெரிய மோசடி நடக்கவிருப்பதற்கான அறிகுறி உள்ள பாதை என்பதாலும், மக்கள் நல்வாழ்வு மோசமடைவதை தடுக்க திராணியற்றது என்பதாலும் இத்தகைய நடைமுறைகள் உடனடி பலனை மட்டும் வைத்து தீர்மானிக்காமல் நீண்டகால அடிப்படையில் பலன்தராது என்பதால் கடுமையாக எதிர்ப் பதற்கு சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும். அரசுடைய நலத் திட்டம் என்று இது அங்கீரிக்கப்பட்டு விட்டதால், இதை விமர்சித்தால் நாம் தனிமைப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இதை எதிர்க்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதை பொறுப்புள்ள எதிர்கட்சி களும் தவிர்க்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் செப். 2009

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

திருடனின் கையில் சாவி...!

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா? தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான். அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்று கூடக் கூறப்படுவதுண்டு. மருந்து உற்பத்தி யாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.

கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல் லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், “பரிசு” என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டவைக்கின் றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித்தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!

இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபச்சாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச்செல வையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள் கின்றன.

அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பி னர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்து களை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய “ஃபைசர்” நிறுவனம்,
வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி “வையோக்ஸ்” என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர் விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்..

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள் தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.

கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கை வரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...

எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித் தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற் பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...

ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக் களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?

‘தினமணி’ தலையங்கம் (17.9.2009)

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

சிறுநீர்க்கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை

ச. அன்பழகன்,
தஞ்சை நலம் மருத்துவமனை, தஞ்சாவூர்

சிறுநீர்க்கல்

பெயர் விளக்கம் : சிறுநீர்க்கல் பொதுவாக “சிறுநீரகக்கல்” என்றே வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. சிறுநீரகம் என்ற தமிழ்ச்சொல் பொதுவாக மூத்திரக்காய் (Kidney), வடிகுழாய் (Ureter), சிறுநீர்ப்பை (Bladder) ஆகிய அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஆனால் வழக்கில் சிறுநீரகம் என்ற சொல் மூத்திரக்காயை மட்டும் குறிப்பதாகப் பயன்படுவதால் இங்கு சிறுநீர்க்கல் என்ற சொல் Renal Calculi என்ற ஆங்சிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர்க்கல் எவ்வாறு உருவாகிறது?

சிறுநீர்க்கற்களை உருவாக்கும் மூலப்பொருட்கள் பல இருப்பினும் அவற்றுள் முதன்மையான கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் ஆகியவை பொதுவாக சிறுநீரில் கரைந்து கழிவுகளாக வெளியேறுகின்றன. ஆனால் சிலரின் சிறுநீரில் இந்தக் கழிவுப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் முழுவதுமாக சிறுநீரில் கரைவதில்லை. கரையாத கழிவுகள் சிறுநீர் உறுப்புகளில் படிகங்களாகத் தங்கி. பின்பு படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக உருவாகின்றன. மூத்திரக்காய், வடிகுழாய், சிறுநீர்ப்பை என எந்த இடத்திலும் கற்கள் உருவாகலாம்.

வடிவமும், அளவும் : கற்கள் பல வடிவங்களிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக மாறுவதால் பல கூர்முனைகளைக் கொண்டுள்ளன்.

கல்லின் வரலாறு :

1. மனித உடலில் சிறுநீர்க்கல் எப்பொழுது உருவாகத் தொடங்கியது என்ற ஆராய்ச்சிகளில் மிகவும் தொன்மை( ! ) வாய்ந்த ஆதாரமாகக் கருதப்படுவது கி.மு. 4800 காலத்திய எகிப்து நாட்டின் மம்மியில் இருந்து பெறப்பட்டதுதான்.

2. சுஷ்ருதா என்ற இந்திய மருத்துவர் கி.மு.12ஆம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை செய்து கல்லை நீக்கியதாக மருத்துவ இலக்கியங்களில் காணப்படுகிறது.

3. கி.பி.1879-ல் ஹெய்னிகி என்ற மருத்துவர் கல்லுக்கான அறுவை சிகிச்சை செய்தார்.

4. கி.பி.1800 களில் ஹோமியோபதி மருத்துவம் பயன்பாட்டுக்கு வந்தது. இன்று சிறுநீர்க்கல் சிகிச்சையில் பயன்படும் மருந்துகள் யாவும் அன்றே பயன்பாட்டில் இருந்தன.

5. PCNL எனப்படும் Percutaneous Nephrolithotomy எனப்படும் என்டோஸ்கோப்பி முறை 1976-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. தற்போது பெருமளவு நடைமுறையிலுள்ள ESWL எனப்படும் Extracorporeal Shock Wave Lithotripsy முறை 1980-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறுநீர்க்கல் கணக்கெடுப்பு :

மொத்த மக்கள் தொகையில் 12% பேர் தங்களது வாழ்நாளில் ஏதோவொரு கட்டத்தில் சிறுநீர்க்கல்லால் பாதிக்கப்படுகின்றனர்.

12% ஆண்களும், 5% பெண்களும் தங்களது 70-வது வயதில் சிறுநீர்க்கல் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

சிறுநீர்க்கல் நோயாளிகளில் 50% பேருக்கு 5 முதல் 10 வருடங்களில் திரும்பவும் கல் உருவாகிறது.

பெரும்பான்மையான கல் நோயாளிகள் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 வயதிற்குமேல் கற்களால் பாதிக்கப்படுபவர்கள் குறைவே.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 1000 நோயாளிகளில் 7லிருந்து 10 பேர் சிறுநீர்க்கல்
நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியாவில் சுமார் 70 லட்சம் சிறுநீர்க்கல் நோயாளிகள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் ஆயிரத்துக்கு ஒருவர் கல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

மூத்திரக்காயின் (Kidney) பணியும் கற்களும் :

மனிதனின் வயிற்றின் பின் பகுதியில் தண்டுவடத்தின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக்காய்கள் அமைந்துள்ளன. அவரை வடிவில் உள்ள இந்த மூத்திரக்காய்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களைப் பிரித்து சிறுநீராக மாற்றுகின்றன. இந்தப் பணியை மூத்திக்காயின் இயங்கு பகுதியான நெப்ரான்கள் செய்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 180 லிட்டர் இரத்தம் நெப்ரான்களைக் கடந்து செல்கின்றன.

கற்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை ஏற்கனவே கண்டோம். அவ்வாறு உண்டாகும் கற்கள் மூத்திரக்காயிலேயே தங்கிவிடலாம் அல்லது அங்கிருந்து நகர்ந்து சென்று வடிகுழாயிலோ, சிறுநீர்ப்பையிலோ தங்கிவிடுவதும் உண்டு. அவ்வாறு தங்கியிருக்கும் கற்கள் எவ்வித அறிகுறியும் இல்லாமல் ஒரே இடத்தில் பலவருடங்கள் கூட இருப்பதுண்டு. பல நேரங்களில் கற்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து இரத்தப்போக்கும், அந்தப் பகுதியைச் சுற்றி சீழ்பிடிப்பதும் நிகழ்கிறது. இதனை சிறுநீரிலிருந்து நேரடியாகவோ, பகுப்பாய்வு செய்வதோ அறியலாம் 2மி.மீ முதல் 5 மி.மீ வரை பருமனுள்ள கற்கள் தானாகவே சிறுநீருடன் வெளியேறிவிட வாய்ப்புண்டு.

சிறுநீர்க்கல்லின் அறிகறிகள் : மூத்திரக்காயிலோ, வடிகுழாயிலோ இருக்கும் கற்கள் சிறுநீர் வழியை அடைக்காதிருக்கும் வரை கற்களுக்கான அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. சாதாரணமாக கற்களின் இருப்பு கீழ்காணும் காரணங்களால் வெளிப்படுகினறது.

வழக்கமான முழு உடல் பரிசோதனை.
முதுகில் மந்தமான தொடர்வலி.
சிறுநீர்ப்பாதை அழற்சி.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
சிறுநீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் அல்லது இரண்டும்.
சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்.
சிறுநீர்க்கல்லுக்கே உரித்தான தீவிரவலி, வலியின் தன்மை பிரசவ வலிக்கு ஒப்பாக இருக்கும். வலி முதுகிலிருந்து இடுப்புக்கு பரவும், வலியுடன் குமட்டல், வாந்தி, வயிறு உப்பிசம் ஆகியவை காணப்படும்.

சிறுநீர்க்கல் வலியானது கற்கள் இருக்கும் இடம், நிலை ஆகியவற்றைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் கல்லின் பருமனுக்கும் வலியின் கடுமைக்கும் சம்பந்தமில்லை.

ஆய்வக சோதனையில் சிறுநீரில் படிகங்களும், இரத்த அணுக்களும், சீழும் காணப்படும்.

X-Ray, KUB, Scan மூலம் கற்கள் இருக்கும் இடத்தையும், கற்களின் பருமனையும் அறிய முடியும்.

எச்சரிக்கை : சிறுநீர்க்கற்கள் மூத்திரக்காயில் நீண்ட காலம் தங்கியிருந்து அதனை சீழ் பிடிக்கச் செய்து செயலிழக்கச் செய்யும் அபாயமும் உண்டு.

ஹோமியோபதி பார்வையில் கற்களும் சிகிச்சையும்

ஹோமியயோபதி பார்வையில் உருவாகும் கேள்விகள் :

1. ஆயிரம் பேரில் பத்து பேருக்கு மட்டும் ஏன் கற்கள் உருவாகின்றன?

2. ஒரே வகையான சுற்றுச்சூழல், ஒரே மாதிரியான குடிநீர், ஒரே வகையான உணவுப்பழக்கம் உள்ளவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கற்கள் உருவாவதேன்?

3. ஒரே குடும்பத்தில் பலர் இருந்தும் ஒருவருக்கு மட்டும் ஏன் கற்களின் பாதிப்பு?
இந்தக் கேள்விகள் ஹோமியோபதியில் அடிப்படையானவை.

மனிதனின் உயிராற்றல் (Vital Power) மாறுபாடு அடையும்போது மனம் உடல் இயக்கங்கள் மாறுபாடு அடைகின்றன. இந்த மாறுபாடுகளே நோய்க்குறிகளாக வெளிப்படுகின்றன. உயிராற்றல் பலமிழந்துள்ள மனிதர்களை மட்டுமே நோய்கள் தாக்குகின்றன. எல்லா நோய்களும்
( சிறுநீர்க்கல் உட்பட) எல்லோரையும் தாக்குவதில்லை. எனவேதான் ஹோமியோபதி நோயுற்ற மனிதனை உற்று நோக்குகிறது. ஏன் இவரை இந்த நோய் தாக்கியிருக்கிறது என்று ஆராய்கிறது.

சிகிச்சை முறை : “உயிராற்றல் சரிசெய்யப்பட்டால் உடல், மன இயக்கங்கள் சீரடைகின்றன. உடல் பழைய நிலைக்கு அதாவது ஆரோக்கிய நிலைக்கு திரும்பி தானாகவே தன்னை அண்டியிருக்கும் நோய்களை விரட்டியடிக்கிறது”

ஹோமியோபதி மருந்துகள் உயிராற்றலை மேம்படுத்துகின்றன. அதன் மூலம் உடல் நலத்தை மீட்டுத்தருகின்றன. இது எல்லா நோயுற்ற மனிதருக்கும் பொருந்தும். சிறுநீர்க்கற்கள் இதற்கு விதிவிலக்கல்ல.

எவ்வித அறிகுறியும் இல்லாமல், எக்ஸ்-ரே, ஸ்கேன் பரிசோதனை மூலம் அறியப்பட்ட கற்களை வெளியேற்றுவதற்கான சிகிச்சையும், கற்களின் வலியுடன் மருத்துவரிடம் வரும் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் வெவ்வேறு வகையில் அமையும். அதாவது,

1. வேறு காரணங்களுக்காக ஒரு நோயாளி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும்போது தற்செயலாக அவருக்கு தற்கள் இருப்பது தெரியவந்து, அத்தகைய நோயாளி ஹோமியோபதி மருத்துவரிடம் வந்தால், அவரிடம் அவருடைய உடல்நிலை பற்றிய அனைத்து விபரங்களும் கேட்டறியப்படுகிறது. சிறுநீர்க்கல் மட்டுமல்லாது அவர் உடலில் உள்ள அனைத்து கோளாறுகளையும் கேட்டறிந்து, ஒட்டு மொத்த குறிகளின் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவருடைய உயிராற்றல் தூண்டப்படுகிறது அல்லது மேம்படுத்தப்படுகிறது. சீர் செய்யப்பட்ட உயிராற்றல் உடலின் இயக்கங்களை சீர் செய்கிறது. உடல் இயக்கங்கள் சீரடையும் போது அனைத்து நோய்க் குறிகளும் உடலிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றன. பின்பு கற்களுக்கு மட்டும் அங்கென்ன வேலை? அதுவும் உடலை விட்டு வெளியேறும்.

2. சிறுநீர்க்கற்களின் தீவிர வலியுடன் வரும் நோயாளியைப் பொருத்தவரை, அவருக்குள்ள வலி ஆரோக்கியத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அதாவது சிறுநீர்ப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் கற்களை வெளியேற்ற உடல் முயற்சிக்கிறது. அந்த முயற்சியின் விளைவாக கற்கள் சிறுநீர்பாதையில் நகரும்பொழுது அதன் கூர்முனைகள் மூத்திரக்காயிலோ, வடிகுழாயிலே உரசும்போது கடுமையான வலி உண்டாகிறது. இந்நிலையில் அவருக்குள்ள வலியின் தன்மை, சிறுநீர்கழிக்கும் முறை அவருடைய அப்போதைய மனநிலை பிறகுறிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. உடல் முழு பலத்துடன் கற்களை வெளியேற்ற மருந்துகள் உதவுகின்றன. மேலும் வலியின் அதியுணர்ச்சியையும் மட்டுப்படுத்தி நோயாளியை அமைதிப்படுத்துகின்றன. “கற்கள் சத்தமில்லாமல் வெளியேறுகின்றன”.

ஹோமியோபதி மருந்துகள் : சிறுநீர்க்கற்களின் வலியை நீக்கவும், கற்களை வெளியேற்றவும், ஹோமியோபதியில் கீழ்காணும் மருந்துகள் பயன்படுகின்றன.

அர்ஜென்டம் நைட்ரிகம்,கல்கேரியா கார்பானிகா,லாச்சஸிஸ்,போடோபில்லம்,
டெரிபிந்தினா, பெல்லடோனா,சைனா,லைகோபோடியம்,பல்சட்டில்லா,
அர்டிகா யூரேன்ஸ்,பெர்பெரிஸ் வல்காரிஸ்.கோலோசிந்திஸ்,மெர்குரியஸ்,
சர்சபரில்லா,விராட்ரம் விரைடி, பிரையோனியா,டயஸ்கோரியா,நக்ஸ்வாமிகா,
செபியா,காந்தாரிஸ், ஹைட்ராஞ்ஜியா,நைட்ரிக்ஆசிட்,சாலிடாகோ,சாமோமில்லா,
ஹைடிராஸ்டிஸ், ஒசிமம் கானம்,டபாகம்.

ஒவ்வொருவரின் தனித்தன்மை, உடல்வாகு, நோய்க்குறிகள்,மனநிலை அனைத்தையும் அனுசரித்தே மருந்துகள் தேர்வு செய்து கொடுக்கப்படுகின்றன.

ஹோமியோபதி மருத்துவத்தின் பலன்கள் :

ஹோமியோ மருத்துவம் மென்மையானது, விரைவாகவும், நிரந்தரமாகவும் குணமளிக்கக்கூடியது, பக்கவிளைவுகள் அற்றது. பாதுகாப்பானது.

கல்லுடைக்கும் மருத்துவமனைகளில் ரூ,10,000 முதல் ரூ,50,000 வரை செலவாகிறது. ஹோமியோபதியில் ரூ. 200 முதல் ரூ.2,000 வரை மட்டுமே செலவாகிறது.

சிறுநீர்க்கற்களின் தன்மை, நோயாளியின் உயிராற்றல், உடல்வாகு, நோயின் நாட்பட்ட தன்மை ஆகியவற்றை பொருத்து சிகிச்சையின் கால அளவு மாறுபடும். சிறுநீர்க்கல்லின் தீவிர வலிக்கு சிகிச்சை பெறும் போது கற்கள் வெளியேறிய பின்பும், ஒரிருநாட்கள் மந்தமான வலி நீடிக்கலாம். 3-4 நாட்கள் தொடர்ந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. சிறுநீர்க்கல் சிகிச்சைக்குப்பின் தனித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் நோயாளிக்கு ஓரிரு வேளை மருந்து கொடுத்தால் கற்கள் மீண்டும் உருவாவதை தடுக்கமுடியும்.

மருந்துகளை நிறுத்தினால் வந்தது ஆபத்து! நவீன மருத்துவத்தின் இன்னொரு முகம்.

டாக்டர். ச. அன்பழகன்,
தஞ்சை நலம் மருத்துவமனை,
தஞ்சாவூர்.

மருத்துகளை நிறுத்தினால் ஆபத்து காத்திருக்கிறது. நவீன மருத்துவம் ( Modern Medicine/Allopathy) என்று அழைக்கப்படும் ஆங்கில மருத்துவத்தில்தான் இந்தக் கொடுமை.

மனச்சோர்வு, கவலை, மனநோய், தூக்கமின்மை மற்றும் வலிகளுக்காக பரிந்துரைக்கப்படும் பல மருந்துகள் நோயாளிகளை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாக்கி விடுகின்றன - மது மற்றும் போதைப் பொருட்களை போல! இந்த வி­யத்தில் சில ஆங்கில மருந்துகள் மது, அபின் ஹெராயின் போன்ற போதைப் பொருட்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல, சொல்லப் போனால் அவற்றை விட இன்னும் கொடூரமானவை. இத்ததைய ஆங்கில மருந்துகளை சாப்பிடத் தொடங்கிவிட்டால் பின்பு அவற்றிலிருந்து விடுபடுவது சிரமம். அவ்வாறு விடுபட நினைத்து மருந்தை நிறுத்தினாலோ, குறைத்தாலோ கூட நோயாளி மிகுந்த துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.

மருந்துகளை நிறுத்துவதால் திரும்பத்தாக்கும் தொந்தரவுகளை மீள் குறிகள் (Withdrawal Symptoms) அல்லது மீள் விளைவு (Withdrawal Effects) எனக் குறிப்பிடுகிறார்கள். மருந்துகள் இல்லாது வாழ முடியாது என்ற மனநிலையையும் இம்மருந்துகள் ஏற்படுத்துகின்றன. இதனை எதிர் உணர்ச்சித் தாக்குதல (Rebound Effects) என்கின்றனர். இது குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படுகிறது.

மருந்துகளுக்கு அடிமையாவது, அதிக அளவில் மருந்துகளை உட்கொள்வது, மருந்துகளை நிறுத்துவதால் மனதும் உடலும் துன்பத்திற்கு உள்ளாவது இவையனைத்தும் மருந்து உட்கொள்பவரின் இயல்பான உடல், மனக்குறிகள் அல்ல, மருந்துகளால் உடல் மற்றும் மனதில் ஏற்படும் செயற்கையான விளைவுகளேயாகும். இது எவ்வாறு நிகழ்கிறது?

பொதுவாக இத்தகைய மருந்துகள் இரண்டு வகைப்படுகின்றன.

1) தளர்வுறச் செய்யும் மருந்துகள் (Depressants) : நோயாளிகளின் கோபம், கவலை,பதற்றம் ஆகியவற்றை குறைப்பதற்காக டாக்டர்கள்இத்தகைய மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இம்மருந்துகள் நரம்பு மண்டலத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. தசைகளைத் தளர்வுறச் செய்கின்றன. நோயாளி தூக்கக்கலக்கமாகவும், மன அழுத்தம் குறைந்ததாகவும் உணர்கிறான். தூக்க மருந்தாகவும், வலி நிவாரணிகளாகவும் கூட இம் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மருந்துகளில் Halcion எனப்படும் மருந்து உலகமெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் விற்பனை உலகம் முழுவதும் 25 கோடி டாலரை எட்டியிருக்கிறது. மற்ற மருந்துகளில் சில : Xenax, Serax, Ativon, Thoraxin, Mellaril, Prolixin, Miltown, Equamil, Vistanil, Atarax, Benadryl.

2) தளர்வு நீக்கி மருந்துகள் (Antidepressants) கவலை, சோகம், தளர்ச்சி, ஆகியவற்றை நீக்க இம்மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை நோயாளிகள் சோகத்துடன், சோம்பியும், தளர்வுற்றும், எந்த வேலையிலும் நாட்டமில்லாமலும் காணப்படுகின்றனர். இவர்களுக்கு Trycyclics, MOI(Monoamine Oxidase Inhibitors), SSRI(Selective Serotinine Reuptake Inhibitors), SNRI(Serotinine Noradrenalin Inhibitors) ஆகிய ரசாயன குடும்பங்களைச் சேர்ந்த Elavil, asendin, Celexa, Anafranil, Norpramin, Pertofrane, Adapine, Sinequan, Cymbalta, Lexapro, Luvax, Prozac, Effexor மற்றும் பல மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட மருந்துகள் அனைத்தும் மத்திய நரம்பு மண்டலத்தில் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. மூளையில் சுரக்கும் Serotinine எனும் வேதிப்பொருளை குறிவைத்து செலுத்தப்படுபவை SSRI மருந்துகள். இவற்றில் Prozac அதிக பட்ச புகாருக்கு உள்ளான மருந்தாகும். இந்த மருந்துகள் அனைத்தும் அவற்றின் பக்கவிளைவுகளை கணக்கில் கொண்டு மது, ஹெராயின் அபின், மர்ஜூவானா, மார்ஃபின் ஆகிய போதை மருந்துகளின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

சரி. இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது உடலின் நடக்கும் மாற்றங்கள் என்ன?

1) மருந்துகளின் பெயரால் உடலுக்குள் நுழையும் ரசாயனங்களுக்கேற்ப உடல் தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கிறது. திரும்பத் திரும்ப மருந்துகளை உட்கொள்வதால் உடலின் தற்காப்பு அமைப்பு (Defence Mechanism) பாழ்படுத்தப்படுகிறது.

2) மருந்துகளை செயலிழக்கச் செய்ய உடல் முனையும் போது மருந்துகளின் செயல்திறன் குறைகிறது. எனவே கூடுதல் மருந்துகளை (Over Dose) மனம் நாடுகிறது.

3) மருந்துகளை நிறுத்தினால், ஏற்கனவே மருந்துகளுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டுள்ள உடல் மருந்தில்லா நிலைக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருக்கிறது. அதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.

4) மருந்துகளை நிறுத்துவதால் வலி முதலான பிரச்சனைகள் முன்பிருந்ததைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிக பலத்துடன் திரும்புகின்றன. ஆகவே மனம் திரும்பவும் மருந்தை நாடுகிறது. மருந்தில்லாமல் வாழ முடியாது என்ற நிலை உருவாகிறது. பரிந்துரை மருந்துகளால் (Prescription Drugs) ஏற்படும் பக்க விளைவுகளையும், மீள் விளைவுகளையும் பற்றி எழுதுவதற்கு ஒரு புத்தகம் தேவைப்படலாம். இடம் கருதி ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

ஒருவர் எந்த மருந்தை எடுத்துக் கொள்கிறார், எந்த அளவில் எடுத்துக் கொள்கிறார், எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் என்பதை பொறுத்தே மீள் விளைவுகளின் கடுமை உணரப்படுகிறது.

Opioid எனப்படும் ரசாயனத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் முப்பதுக்கும் மேற்பட்ட விற்பனைப் பெயர்களில் சந்தையில் கிடைக்கின்றன. Opioid உடன் Aspirin அல்லது Acetominophan ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட விற்பனைப் பெயர்களில் கிடைக்கின்றன. இவையனைத்தும் மத்திய நரம்பு மண்டலத்தில் (CNS) வேலை செய்பவை. பெரும்பாலும் வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நிறுத்துவதால் குளிர் நடுக்கம், எலும்பு வலி தூக்கமின்னை, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படலாம், மீள் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் மருந்துகளை அதிக அளவில் எடுத்தக் கொள்வதால் நுரையீரல் இயங்காமல் நின்று போகவும் அதனால் மரணம் நேரிடவும் செய்யலாம்.

பிற மீள் விளைவுகள்

- கடுமையான சோர்வு
- குளிர்ந்த அல்லது வெப்பமான வியர்வைப் பொழிவு
- இருதய படபடப்பு
- மூட்டுக்கள் அல்லது தசைகளில் வலி
- தொடர்ந்து கொட்டாவி விடுதல்
- குமட்டல், வாந்தி
- உடல், மனச்சோர்வு, கவலை

இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை நிறுத்துவதால் உயிருக்கே ஆபத்து நேரலாம்:

SSRI மருந்துகளை நிறுத்தும் நோயாளிகள் மன நோயாளிகள் மன நோய்க்கு ஆட்பட்டு தற்கொலை, கொலை, திருட்டு, பாலியல் வன்முறை ஆகிய செயல்பளில் ஈடுபட வாய்புண்டு.

உடலில் சுரக்கும் வேதிப்பொருள்களைக் குறித்த புதிய, புதிய கண்டுப்பிடிப்புகளால் அவற்றைக் குறிவைத்து(Target) தயாரிக்கப்படும் மருந்துகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது. ஆராய்ச்சிகள் முற்றுப்பெறாத நிலையிலேயே, குறைந்தபட்ச தகவல்களைக் கொண்டு அதனடிப்படையில் மருந்துக் கம்பெனிகள் மருந்துகளைத் தயாரித்து விற்பனைக்கு விடுகின்றன. புதிய மருந்துகள் சந்தைக்கு வருவதும், அவற்றின் மீது புகார்கள் எழுதுவதும் பின்பு அவை தடை செய்யப்படுவதும், மீண்டும் புதிய மருந்துகள் சந்தைக்கு வருவதுமான இந்த நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆங்கில மருத்தவர்கள் இத்தகைய மருந்துகளின் மீது முழு நம்பிக்கை (?) வைத்து தங்கள் தொழிலை நடத்தி வருகின்றனர், பாவம் அவர்கள்! மக்களும்தான்!

1950 களிலிருந்தே இவ்வகை மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இவற்றின் பக்க விளைவுகள், பின் விளைவுகள் குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்தாலும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த கணக்கெடுப்புகள், மற்ற விபரங்கள் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு ஊடகங்களின் வளர்ச்சிககுப் பின்தான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. SSRI மருந்துகளின் மீள் விளைவுகளால் பாதிககப்பட்ட நோயாளிகளின் விபரங்கள், சம்பவங்கள், பத்திரிகைச் செய்திகள் வழக்குகள் என 2700க்கும் மேற்பட்ட ஆவணங்களை www.ssristories.com என்ற இணையதளம் தொகுத்து வைத்திருக்கிறது. இவற்றில் 63 நோயாளிகளின் வினோதமான நடத்தைகள், பள்ளிகளில் மாணவர்கள் சகமாணவர்களை ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்ட 47 சம்பவங்கள், சாலை விதிகளை மீறுதல், கோர விபத்துகள், வானூர்திகளின் விபத்துகள் என 64 சம்பவங்கள், பிறரை சுட்டுக் கொன்றதான 500க்கு மேற்பட்ட சம்பவங்கள், பிறரை சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்து போன 180 க்கும் மேலான சம்பவங்கள், பணிபுரியும் இடத்தில் வன்முறையில் ஈடுபட்டதான பல்வேறு சம்பவங்கள், அமெரிக்க FDA (Food & Drug Administration) நிறுவனம் அவ்வப்போது மருந்துகளைக் குறித்து விடுத்த எச்சரிக்கைகள் அனைத்தம் அடங்கும். இந்த இணையதளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் சொற்பமானவை. ஊடகங்களில் கவனத்துக்கு வராத சம்பவங்கள் எத்தனை, எத்தனையோ?

நோய்கள் ஆபத்தானவையாக இருக்கலாம். அதைவிட மருந்துகள் ஆபத்தானவையாக இருக்கலாமா?

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இந்திய மருத்துவமுறைகளின் கீழ் தடுப்பு மருந்துகள்-மத்திய சுகாதார செயலாளர்களிடம்-நலம் கூட்டமைப்பு மருத்துவர்கள் மனு.

புதுடில்லி, செப். 15- பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இந்திய மருத்தவமுறைகளின் கீழ் போதுமான அளவிற்குத் தடுப்பு மருந்துகள் உள்ளதாக, நலம் கூட்டமைப்பு மருத்துவர்கள், மத்திய சுகாதார செயலாளரிடம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இந்திய மருத்துவமுறைகளின் கீழ் பயிற்சிபெற்று மருத்துவ சேவை செய்து வரும் சுமார் நான்காயிரம் மருத்துவர்கள் நலம் கூட்டமைப்பு என்னும் அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றனர். இதன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நா. சண்முகநாதன், பொதுச் செயலாளர் டாக்டர் எம். கதிர்வேல், தலைமையிட செயலாளர் டாக்டர் துரை. முத்துராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர் டாக்டர் சாமினாதன் ஆகியோர் திங்களன்று மத்திய சுகாதார செயலாளரைச் சந்தித்தனர். ஹோமியோபதி மருத்துவமுறையின் கீழான அர்சனிகம் ஆல்பம்-30 என்னும் மருந்தை பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய முறைகளிலும் போதுமான அளவிற்கு மருந்துகள் இருக்கின்றன என்று கூறி அவற்றையும் பரிந்துரைத்திட ஆவன நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு செயலாளரிடம் கோரினர். மேலும் இவற்றை மத்திய அரசு ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் போதிய அளவிற்கு விளம்பரங்கள் செய்து பிரபல்யப்படுத்திட வேண்டும் என்றும் அவர்கள் மத்திய சுகாதார செயலாளரிடம் கேட்டுக் கொண்டனர். இத்தகவல்களைப் பின்னர் அவர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

தகவல்: ச. வீரமணி

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பன்றிக் காய்ச்சலும் ஹோமியோபதி மருத்துவமும்

டாக்டர் ச. அன்பழகன்
இயக்குனர், தஞ்சை நலம் மருத்துவமனை

இன்று நாளிதழ்களையும், ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ள முக்கியச் செய்தி “பன்றிக் காய்ச்சல்”. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை என அரசு தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் பீதியும் பிற பகுதிகளில் ஒரு அச்ச உணர்வும் இருக்கத்தான் செய்கிறது. பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள், காரணம், பாதுகாப்பு முறைகள் பற்றி குறுகிய காலத்தில் நிறைய பேசியாகிவிட்டது. பன்றிக்காய்ச்ச லுக்கான மருத்துவம், மருந்துகள்? இந்தக் கேள்விக்கான ஒரே பதில் டாமிபுளு (Tamiflu) ஆக உள்ளது, Oseltamivir என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துதான் Tamiflu என்கிற வணிகப் பெயரால் அழைக்கப்படுகிறது. இன்று உலகளவில் H1N1 வைரசுக்கான ஒரே மருந்து Tamiflu மட்டும்தான். 10 மாத்திரைகளைக் கொண்ட ஒரு அட்டையின் விலை சுமார் ரூ.1000/- ஒரு நோயாளிக்கு குறைந்தபட்சம் ஒரு அட்டை தேவைப்படும். அரசு இந்த மருந்தினை எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது நமக்கு தெரியாது. வெளிச்சந்தையில் இதன் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. அரசு மட்டுமே இதனை இருப்பு வைத்துக் கொள்ளமுடியும்.

சரி இத்தனை விலைகொடுத்து வாங்கப்படும் இந்த மருந்து H1N1 வைரசை கட்டுப்படுத்துவதில் அத்தனை திறன் வாய்ந்ததா என்பது பற்றி Lancel மற்றும் British Medical Journal ஆகியவை கேள்வி எழுப்பியுள்ளன. இந்த மருத்துவ இதழ்கள் செய்த ஆய்வுகளின்படி Tamiflu அப்படி ஒன்றும் முழுத்திறன் வாய்ந்த மருந்து அல்ல என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் பக்கவிளைவுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இருந்தும் வேறு வழியில்லை. ஆங்கில மருத்தவத்தில் இதைத் தவிர வேறு மருந்தில்லை. Relenza என்கிற வணிகப் பெயரில் இன்னும் ஒரு மாத்திரை இருந்தாலும், மூலப்பொருள் என்னவோ இரண்டிலும் ஒன்றுதான். பன்றிக்காய்ச்சலுக்கான H1N1 வைரஸ் 1930ல் கண்டுபிடிக்கப்பட்டு பன்றியிடமிருந்து பிரித்தெடுக்கபட்டாலும் அதற்கு இதுவரை தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிக்கப்படவில்லை. நல்ல வேளை. மற்றுமொரு தடுப்பூசி மரணத்தை நமது மக்கள் சந்திக்க வேண்டியதில்லை!

பன்றிக்காய்ச்சலுக்கு Tamifluவை விட்டால் வேறு வழியில்லையா ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு மருத்துவ முறைகள் எதுவும் பன்றிக்காய்ச்சலைத் தடுக்காதா? குணமாக்காதா?

நிச்சயம் ஹோமியோபதி மருத்துவம் அதனைச் செய்யும். 1918-ல் ஸ்பனிஷ் ஃப்ளு உலகெங்கிலும் 5 கோடி பேரை பலி கொண்டது. அந்த காலக்கட்டத்திலேயே மக்களை மரணத்திலிருந்து மீட்பதில் ஹோமியோபதி மருந்துகள் பெரும் பங்காற்றியுள்ளன. அமெரிக்காவில் 1918-ல் ஆங்கில மருத்துவர்களிடம் ஃப்ளு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றவர்களில் இறப்பு விகிதம் 30 சதவிகிதம். அதே நேரத்தில் ஹோமியோபதி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றவர்களில் இறப்பு விகிதம் 1.05 சதவிகிதம் மட்டுமே. பல ஹோமியோபதி மருத்துவமனைகளில் ஒரு இறப்பு கூட இல்லாமல் 100 சதவீதம் பேரும் குணமாகி வீடு திரும்பியதற்கான சான்றுகள் உள்ளன. இவை அனைத்தையும் அன்று சாதித்தவை இரண்டே ஹோமியோபதி மருந்துகள். அவை ஜெல்சிமியம் மற்றும் பிரையோனியா. இந்த இரண்டு மருந்துகளும் இன்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளவை. இவை மட்டுமல்ல. இன்னும் பல மருந்துகளும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஃப்ளு காய்ச்சலை தடுத்தும், காய்ச்சல் வந்தபின் குணமாக்கியும் அற்புதங்களை செய்து வருகின்றன.

ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்த பிறகுதான் Tamiflu மாத்திரையை அவருக்கு கொடுக்க முடியும். ஆனால் பன்றிக்காய்ச்சலின் தாக்குதலுக்கு ஆளாகாத எவருக்கும் ஹோமியோபதி மருந்துகளை தடுப்பு மருந்துகளாகக் கொடுக்க முடியும். ஒரு நோயாளிக்கு Tamifluவுக்காக செய்யும் செலவில் 100 நோயாளிகளுக்கான ஹோமியோபதி மருந்துகளை வாங்க முடியும். இதனால் பன்றிக்காய்ச்சல் மருத்துவத்தில் அரசின் நிதிச்சுமை 90 சதவீதம் குறையும்.

இதுகுறித்து எத்தனையோ முறை ஹோமியோபதி மருத்துவர்கள் அறிக்கைகள் விடுத்தும் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளவேயில்லை. இது மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு செய்யும் துரோகம்.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர். ஹோமியோபதியில் உலகறிந்த சமகால மேதைகள் பலர் இந்தியாவில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் அவர்களை அழைத்து விவாதிக்க வேண்டும். ஹோமியோபதியிலான பன்றிக்காய்ச்சல் தடுப்பு முகாம்களை நாடு முழுவதும் நடத்தி மக்களை மரணத்திலிருந்து காக்க வேண்டும்.

பின் குறிப்பு :-

பன்றிக்காய்ச்சலுக்கு ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை தடுப்பு மருந்தாக அனைவரும் எடுத்துக் கொள்ளலாமென இந்திய ஒன்றியத்தின் நலவாழ்வு அமைச்சகம் சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது.